Saturday, August 06, 2011

13 ஆண்டுகளாக ரமலான் நோன்பு நோற்கும் இந்து சகோதரிகள்




சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கம்மாபுரிபட்டினத்தை சேர்ந்த சப்இன்ஸ்பெக்டர் விஜயராஜ் அவர்களின் மனைவி சாந்தி என்ற சகோதரியும், அவர்களின் மகள் சண்முகப்பிரியா என்ற சகோதரியும் புனிதமிக்க ராமலாளன் நோன்பு நோற்று வருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தபோது வியப்பின் உச்சிக்கு சென்றோம். காரணம் சாந்தி அவர்கள் இன்று நேற்றல்ல சுமார் 13 ஆண்டுகளாகவும், அவர்களது மகள் சண்முகப்பிரியா சுமார் ஒன்பது ஆண்டுகளாகவும் ரமலான் முழுவதும் நோன்பு நோற்பது தான் வியப்பிற்கு காரணம். அதே நேரத்தில் இவர்கள் இவ்வாறு நோன்பு நோற்பதற்கு ஒரு காரணம் உண்டு. சகோதரி சாந்தி கடந்த 1996 ஆம் ஆண்டு தனது நகையை தவற விட்டிருக்கிறார். நோன்பு வைத்து வேண்டிக் கொண்டால் நகை திரும்ப கிடைக்கும் என்ற சில முஸ்லிம் பெண்களின் ஆலோசனைப்படி,


சாந்தி நோன்பு வைத்துள்ளார். முஸ்லிம் பெண்கள் சொன்னபடி திருடுபோன நகை திரும்பக் கிடைக்கவே அந்த ஆண்டு முதல் தானும் தொடர்ந்து நோன்பு நோற்றது மட்டுமன்றி, தனது மகளையும் நோன்பு நோற்குமாறு செய்திருக்கிறார். சகோதரி சாந்தி அவர்களின் கணவர் விஜயராஜ் அவர்கள், தனது மனைவி-மகளின் நோன்பை ஆதரிப்பதோடு, புத்தாடை எடுத்து பெருநாளையும் கொண்டாடி வருகிறாராம்.
நன்றி தினத்தந்தி

மேலும் இவர்களைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில்
 லேத் பட்டறை நடத்தி வரும் ராதாகிருஷ்ணன், 11 ஆண்டுகளாக ரமலான் நோன்பு இருந்து வருகிறார். கீழக்கரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(65). இவர், போஸ்ட் ஆபீஸ் தெருவில் லேத் பட்டறை வைத்து நடத்துகிறார்.இவருக்கு மனைவி மற்றும் ஆறு பிள்ளைகள் உள்ளனர். சமூக நல சேவை இயக்க செயலர்.


இவர் கூறியதாவது: கீழக்கரையைச் சேர்ந்த, மறைந்த அரசியல் பிரமுகருக்கும், எனக்கும் கடந்த 2000ல் ரம்லான் நோன்பு கடைபிடிப்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டது. அந்த ஆண்டு நோன்பு நூற்றேன். அதன்பின் தொடர்ந்து ஆண்டுதோறும் முழுமையாக நோன்பு கடை பிடித்து வருகிறேன். இதற்காக அதிகாலையில், எனக்காக எனது மனைவி உணவு தயார் செய்து தருகிறார். நண்பர்கள் அழைத்த போதும் பணிபளுக் காரணமாக பள்ளிவாசல் செல்ல முடியவில்லை. எனது பட்டறையில், முஸ்லிம் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறந்து வருகிறேன். இதில் மன திருப்தி ஏற்படுவதுடன், மக்களிடையே நல்லிணக்கமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.














No comments: