Saturday, March 17, 2012

பாகிஸ்தானில் இந்து பெண்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவது உண்மை தான்-ஸர்தாரியின் சகோதரி


பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து பெண்களை கடத்தி சென்று கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.


பாகிஸ்தானில் இந்து பெண்களை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக மதம்மாற்றி திருமணம் செய்துகொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. கடந்த சில தினங்களில் 3 இந்துப் பெண்கள் கடத்தப்பட்டதாகவும், இதனால் இந்துக்கள் பாதுகாப்பின்றி உள்ளதாக உணர்வதாகவும் பாகிஸ்தான் இந்து கவுன்சில் தலைவர் ரமேஷ் குமார், பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இதுகுறித்த வழக்கு ஒன்றில் கடத்தப்பட்ட 3 இந்து பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் இந்த பெண்களை கட்டாயப்படுத்தி முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவது உண்மை தான் என ஜனாதிபதி ஸர்தாரியின் சகோதரி கூறியுள்ளார்.





பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி ஸர்தாரியின் சகோதரியுமான அஸ்ரா பாசல் பேசுகையில், சிந்து மாகாணத்தில் உள்ள சில இந்து பெண்களை கடத்தி சென்று மதரசாக்களில்(முஸ்லிம்கள் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ளும் இடம்) அடைத்து வைத்த சம்பவம் உண்மை தான்.
Azra Fazal Pechuho


அவர்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி முஸ்லிம் ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிந்து மாகாணத்தில் இந்து பெண்கள் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.



பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு தேவையான சட்டத்தை கொண்டு வரவேண்டும். கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டும் என்றார்.



இவரது கருத்தை ஆதரித்து மற்றொரு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நபீசா ஷாவும் நாடாளுமன்றத்தில் பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


அன்புடன் சக்தி

No comments: