Thursday, June 28, 2012

மேலூர்-சென்னைக்கு இடையே புதிய பஸ் போக்குவரத்து: சாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மதுரை மாவட்டம் மேலூர் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். மேலூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வெளிநாடுகளில் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் அலுவலகங்களில் பலர் வேலை செய்கின்றனர். மேலூரில் இருந்து ஏராளமானவர்கள் என்ஜினீயரிங் மற்றும் உயர்கல்வி படித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை செல்ல பல பஸ்கள் மேலூர் உள்ளே வராமல் பைபாஸ் வழியாக செல்கின்றது. இதனால் மேலூரில் இருந்து சென்னை பஸ்சில் செல்ல மேலூர் பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டனர்.


மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. சாமி இது பற்றி சட்டசபையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். இவரது கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனடியாக மேலூரில் இருந்து சென்னைக்கு பஸ் விட உத்தரவிட்டார். அதோடு கடந்த 19-ந்தேதி முதல்வர் ஜெயலலிதா புதிய பஸ் போக்குவரத்தினை தொடங்கி வைத்தபோது மேலூருக்கும் நவீன சொகுசு பஸ் வழங்கினார்.


இந்த புதிய பஸ்சை மேலூரில் இருந்து சென்னைக்கு சாமி எம்.எல்.ஏ. கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இப்பஸ் தாலுகா அலுவலகம் முன்பு தினசரி இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும். நவீன வசதிகளுடன் உள்ள இந்த பஸ்சில் சென்னை செல்ல கட்டணம் ரூ. 305 மட்டுமே. மேலும் இந்த பஸ் கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி ஆகிய ஊர்களிலும் பயணிகளை ஏற்றி செல்லும். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சாமி எம்.எல்.ஏ. கூறினார்.


மதுரை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஜபார், நகராட்சி தலைவர் சரவணன், மேலூர் யூனியன் சேர்மன் செல்வராஜ், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிசெழியன், வல்லாளபட்டி சேர்மன் உமாபதி, மாவட்ட கவுன்சிலர் சூரக்குண்டு அம்பலம், மேலூர் யூனியன் துணைத் தலைவர் முருகன், நகர அவைத்தலைவர் நாகசுப்பிரமணியன், நகராட்சி முன்னாள் தலைவர் சாகுல்அமீது, தொகுதி இணைசெயலாளர் ஜீவசன்மார்க்கம், மாவட்ட இலக்கிய அணி தலைவர் மலைச்சாமி, கீழையூர் வேலு, ராமையா, ஒன்றிய அவைத்தலைவர் பிச்சைராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கயஸ்முகமது, செல்வராஜ், அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் பீர்முகமது மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
  
அன்புடன்                                                           நன்றி
  சக்தி                                                           மாலைமலர்

Wednesday, June 27, 2012

நீயா இறைவன்?

கடவுளை மனிதன் வணங்கலாம்
மனிதன் தன்னை தானே கடவுள் என்று கூறினால்
அதனை என்னவென்று சொல்வது
 இங்கே கடவுள் என்று கூறிக்கொண்டு தன்னை  தானே
விளம்பரப்படுத்திக் கொள்பவர்களை ...............?











அன்புடன்
  சக்தி

Saturday, June 23, 2012

மேலூரில் போதையில் ரோட்டில்கிடந்த 10ம் வகுப்பு மாணவர்

மேலூர்:மதுரை மாவட்டம் மேலூரில் எழுத்துக்களை அழிக்க பயன்படும் ஒயிட்னர்களை போதைக்கு பயன்படுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு மாணவர் போதை அதிகரித்து புத்தக பையுடன் ரோட்டில் கிடந்தார்.தவறாக எழுதியதை அழிக்க "ஒயிட்னர்' என்ற கரெக்ஷன் புளூயிட் திரவம் பயன்படுகிறது. ரூ.30 கொடுத்து இவற்றை வாங்கும் மாணவர்கள் நூல்கண்டில் திரவத்தை ஊற்றி, கசக்கி நுகர்கின்றனர். தண்ணீர் பாக்கெட்டில் ஊற்றி வாயால் உறிஞ்சுகின்றனர். இதில் போதை ஏற்படுகிறது. அடிமையாகும் மாணவர்கள், நண்பர்களுக்கும் பழக்கி விடுகின்றனர்.நேற்று காலை மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உசேன் பஜார் முன், பள்ளி மாணவர் ஒருவர், மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள கடையில் படுக்க வைத்தனர். அவரது புத்தக பையை ஆராய்ந்த போது, மேலூரிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிப்பவர் என தெரிந்தது. ஒயிட்னர் என்ற டெலுட்டர், கரெக்ஷன் புளூயிட் பாட்டில்கள், நூல் கண்டு ஆகியவை புத்தக பையில் இருந்தன. மயங்கிய மாணவர் போதையில் இருந்தது தெரிந்தது. இவரை போல பல மாணவர்கள் இந்த போதைக்கு அடிமையாக இருப்பதாக மாணவர் கூறினார். சிறு வயதில் போதைக்கு அடிமையாகும் இம்மாணவர்கள் குறித்து ஆசிரியர்கள் விசாரித்து பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். வீட்டிலிருந்து செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு ஒழுங்காக சென்றார்களா என கண்காணிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் போதையால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.
                                                          நன்றி தினமலர்

Thursday, June 14, 2012

மேலூர் அருகே வீடு புகுந்து தாக்க முயற்சி: கல்தூணில் கட்டி வைத்து வாலிபர்கள் மீது தாக்குதல்

 மேலூர் அருகே வீடு புகுந்து தாக்க முயற்சி: கல்தூணில் கட்டி வைத்து வாலிபர்கள் மீது தாக்குதல்
மேலூர், ஜூன் 10-
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு போலீஸ் சரகம் உறங்கான்பட்டியை சேர்ந்தவர் காசி. இவரது வீடு அருகே வசிப்பவர் ராஜேஸ்வரி. இவர்களுக்கிடையே பாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 3 பேர் ராஜேஸ்வரிக்கு ஆதரவாக காசியின் வீட்டுக்கு ஆயுதங்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்தவர்களை தாக்க முயன்றனர்.
இதனால் காசி குடும்பத்தினர் அலறி சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தப்பி ஓட முயன்றனர்.
உடனே அவர்களை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து ஊரின் மையப்பகுதியில் கல் தூணில் கட்டி வைத்து தாக்கினர். இதில் ஒருவர் மயக்கமடைந்தார். ராஜேஸ்வரியும் மயங்கி விழுந்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஆயுதங்களுடன் வந்து பொதுமக்களால் தாக்கப்பட்டவர்கள் மேலூர் அருகே உள்ள சருகுவலைய பட்டியை சேர்ந்த பாக்கியராஜ் (வயது22), இடைய வலசையை சேர்ந்த ரகு (20), சொக்கம்பட்டி ரமேஷ் (22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
தாக்கப்பட்டதில் மயக்கம் அடைந்த ராஜேஸ்வரி உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காசி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அன்புடன்                                                                                                                                  நன்றி
                                                                                                                                                      மாலைமலர்
  சக்தி