Thursday, January 24, 2013

கருப்புச்சாமியின் அதிசய நீருற்று

மேலூர், : கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்குடியில் கிடைத்திருக்கும் அதிசய நீருற்று 18 பட்டி கிராம மக்களின் வறட்சியை போக்கும் அட்சய பாத்திரமா விளங்குகிறது.


கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிரயான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது பால்குடி கிராமம். இங்குஅறிவி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் உள்ள கருப்பர் கோயில் அருகில் தரையில் ஒரு ஆடி ஆழத்தில் ஒரு அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. இப் பள்ளத்திலிருந்து ஊற்று தண்ணீர் வற்றாமல் வந்துகொண்டே இருக்கிறது. கடுமையான வறட்சி காலங்களில் கூட தண்ணீர் வற்றுவது கிடையாது.

பட்டூர், வெள்ளுத்துப்பட்டி, பால்குடி, கலப் பாறை, அய்வத்தாம்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தினமும் டூ வீலர் மற்றும் சைக்கிள்களில் வந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். தண்ணீர் பால் போன்ற சுவையுடன் உள்ளதால் குடிப்பதற்கும் சமையலுக்கும் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தினமும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தண்ணீர் பிடித்தாலும் வற்றாமல் வந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தண்ணீர் பிடித்தது போக மற்ற நேரங்களில் ஊறும் தண்ணீரை பால்குடி பொதுமக்கள் கண்மாயில் தேக்கி வைக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளின் தாகமும் தீர்க்கப்படுகிறது.

மிச்சப்படும் தண்ணீரை கொண்டு பருவத்தில் உள்ள பயிர்களின் விளைச்சலுக்கு தேவைப்படும் கடைசி தண்ணீராகவும் பயன்படுத்துகின்றனர்.

கிராமத்து நாட்டாமை கருப்புச்சாமி கூறுகையில், க்கருப்பசாமி அருளால் எங்களுக்கு இந்த அதிசய நீருற்று கிடைத்திருக்கிறது. இத் தண்ணீரை பருகுவதால் எங்களுக்கு நோய் நொடிகள் வராது. 18 கிராம மக்களின் உறவினர்கள் வீடுகள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு கூட இந்த தண்ணீரை கொடுத்தனுப்புகிறோம். இவ்விடத்துக்கு அருகில் நூற்றுக்கணக்கான அடியில் உள்ள கிணறுகள் கூட தண்ணீரின்றி வறண்டு கிடக்கிற அதே வேளையில் எங்களுக்கு எல்லா காலங்களிலும் தண்ணீர் கிடைக்கும் அதிசய நீருற்று கிடைத்திருக்கிறது என்கிறார்.





அன்புடன் சக்தி

No comments: